திருவாசகத்தில் நாட்டிய அகப் பாடல்களில் பாடல்கள்
முனைவர். சண்முக செல்வகணபதி
மேனாள் முதல்வர்
அரசுக் கல்லூரி, திருவையாறு
சைவக்திருமுறைகளுள் எட்டாம் திருமுறையாக விளங்கும் திருவாசகம் மாணிக்கவாசகர் அருளியதாகும். வாதவூரர் என்ற பெயரில் பிறந்த ஊரின் பெயரால் அழைக்கப்பட்டார். மணிமணியான வாசகங்களைக் கூறியமையால் மணிவாசகர் என்றும் பின்பு மாணிக்கவாசகர் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் திருவாசகத்தோடு திருச்சிற்றம்பலக் கோவை என்கிற கோவை நுhலொன்றும் பாடியுள்ளார். இந்நுhலும் கோவை என்று கூறப்படுகிறது.
திருவாசகம் 51 தலைப்புகளையும் 656 பாடல்களையும் கொண்டுள்ளது. இவற்றில் ஒன்பது தலைப்புகளின் கீழ் அமைந்துள்ள 263 பாடல்கள் மகளிர் விளையாட்டின் பெயரால் அழைக்கப்படுகின்றன. 1. திருவெம்பாவை, 2. திருவம்மானை, 3. திருப்பொற்சுண்ணம், 4. திருத்தெள்ளேணம், 5. திருச்சாழல், 6. திருப்பூவல்லி, 7. திருவுந்தியார், 8. திருத்தோணோக்கம், 9. திருப்பொன்னூல், 10. குயில்பத்து இவை அனைத்தும் நாட்டுப்புற நாட்டியப் பாடல்களாக உள்ளன. அடியார்க்கு நல்லார் இளமகளிர் இசையுடன் பாடடியாடும் பல்வரிக் கூத்துக்களாக இவற்றைக் குறிப்பிடுகிறார். அம்மானை, நல்லார் தோள்வீச்சு (தோணோக்கம்) சாழல், உந்தி, அவலிடி (பொற்சுண்ணம்) கொய்யுமுள்ளிப்பூ (பூவல்லி) ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார்.
1.1 பாவை
சங்க இலக்கியங்களில் கூறப்படும் தை நீராடல், தெய்வத்தமிழ் காலத்தில் மார்கழி நீராடலாகி பின்பு பாவை நோன்பாயிற்று. பாவை நோன்பை முன்னிட்டு இளம் கன்னிப் பெண்கள் மார்கழித் திங்களில் விடியல் காலையில் எழுந்து ஒருவரை ஒருவர் எழுப்பிக் கொண்டு ஆற்றங்கரைக்குச் சென்று, ஆற்றில் நீராடி, மணலால் பாவை உருவம் செய்து வழிபடுவர். நாடு நலம் பெற மழைவளம் சுரக்க வேண்டுமென்றும், மன்னவன் கோல்முறை தவறாது ஆட்சி செய்யவேண்டுமென்றும், தங்களுக்கு நல்ல இல்வாழ்க்கை அமைய வேண்டுமென்றும் கருதி நோன்பிருப்பர். நோன்பு நாட்களில் நெய்யுண்ணாமல், பாலுண்ணாமல், தங்களை வெகுவாக ஒப்பனை செய்து கொள்ளாமல் இருப்பர். இத்தகைய நோன்பு கார்த்தியாயனி விரதமாகவும் கருதப்பட்டது. இதனை ""அம்பா ஆடல்"" என்பர். ‘அம்பா ஆடலின் ஆய்தொழக் கன்னியர்’ என்று நல்லந்துவனார் குறிப்பிடுவார். ""எம்பாவாய்"" என விளித்துக் கொண்டு ஆடுவர்.