Pages

Sunday 1 November 2015

கலம்பம் - சொற்பொருள்

கலம்பம் - சொற்பொருள் : 


முனைவர் ப. தாமரைக்கண்ணன்
இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை,
மாநிலக் கல்லூரி, சென்னை-600 005.

கலம்+அகம் எனப் பகுத்துக் கலம் என்பது 12 என்றும் பகம் என்று பாதியாகிய ஆறு (6) என்றும் இரண்டும் கூட்டினால் 18 உறுப்புகள் என்றும், ஆக 18 உறுப்புகளைக் கொண்டது கலம்பகம் எனப் பொருள் உரைப்பர். அஃது ஆய்வுக்குரியது.

கலம்பகம் என்பதனை இக்காலத்தில் நாம் கூறும் ‘கதம்பம்’ என்ற சொல்லினோடு பொருத்திப் பொருள் கொள்ளலாம். கலம்பகம் என்பதற்குக் ‘கலவை’ எனப் பொருள் சொல்லலாம். ‘பல்பூ மிடைத்த வடலைக் கண்ணி’ என்று பெரும்பாணாற்றுப் படையும், ‘களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த அலங்கலத் தொடையல்’ என்று தொண்டரடிப் பொடியாழ்வாரும் (திருப்பள்ளி-5) கூறும் நிலையில் பல்பூமாலையாகப் பல்வகைப் பாக்களால் ஆகியது கலம்பகம்.
கலப்பு+அகம் = கலப்பகம் என்பது மெலித்தல் விகாரமாய்க் கலம்பகம் என்றாயிற்று.
கலம்பக இலக்கணம்
சொல்லிய கலம்பகம் சொல்லில் ஒருபோகு
முதற்கண் வெண்பாக் கலித்துறை புயமே
அம்மனை, ஊசல், யமகம், களிமறம்,
சிந்து, காலம், மதங்கி, வண்டே
கொண்டல், மருள்சம் பிரதம், வெண்டுறை
தவசு, வஞ்சித் துறையே இன்னிசை
புறமேல் அகவல் விருத்தம் எனவரும்
செய்யுட் கலந்துடன் எய்திய அந்தம்
ஆதியாக வருமென மொழிப ""
 பன்னிரு பாட்டியல் 129
எனவரும் நுhற்பா, கலம்பக இலக்கணத்தையும், உறுப்புகளையும் திரட்டிக் கூறுகிறது.
ஒருபோகு, வெண்பா, கலித்துறை ஆகிய இவை முதலுறுப்பாக அமைய, புயம் முதலாகத் தவம் ஈறாக உள் பதினான்கு உறுப்புகள் வேண்டுறை, வஞ்சித்துறை, இன்னிசை வெண்பா, அகற்பா, விருத்தம் ஆகிய இவற்றில் விரவிவர அந்தாதியாக முடிவது கலம்பகம் என்னும் இலக்கியமாகும் என்பது இதன் பொருள் ஆகும்.
தேவர்க்கு 100, (அந்தணர்க்கு), முனிவர்க்கு 95, அரசர்க்கு 90, அமைச்சருக்கு 70, வணிகர்க்கு 50, வேதியர்க்கு 30, ஆகச் செய்யுட்கள் அமைவது மரபு என்றும் பன்னிருபாட்டியல் (130) கூறுகிறது.
கலம்பகம் பதினெட்டு உறுப்புகளுடையதா?
(1) புயம், (2) அம்மானை, (3) ஊசல், (4) யமகம், (5) சளி, (6) மறம், (7) சித்து, (8) காலம், (9) மதங்கி, (10) வண்டு, (11) கொண்டல், (12) மருள், (13) சம்பிரதம், (14) தவம் ஆகிய பதினான்கு உறுப்புகளே அமைய வேண்டும் என்று பன்னிரு பாட்டியல் முதலிய நுhல்கள் இலக்கணம் வகுக்க, கலம் (12)+பகம் (6)= 18 எனப் பகுத்துக் கூறல் பொருந்தாது. மேலும் பலப்பல உறுப்புகளும் கலம்பகத்துள் வழங்கி வரக் காண்கிறோம். அவை வருமாறு
(1) புயம் - பாட்டுடைத் தலைவன் தோளின் வனப்பும் ஆற்றலும்
(2) அம்மானை - மூன்று பெண்கள் ஆடும் ஆட்டம் - உரையாடல்
(3) ஊசல்  பெண்கள் ஊஞ்சல் ஆட்டிப் பாடுதல் (கலித்தொகை)
(4) மடக்கு  நுhலின் இடையே சொல், சீர் ஆகியன மீண்டும் பொருள் வேறுபட அமையப் பெற்ற பாடல்.
(5) களி  கட்குடியார், கள்ளைச் சிறப்பித்துப் பாடல் (சிறிய கட்பெறினே, புறநானூறு.)
(6) மறம் - ஓர் அரசன் மகட்கொடை கேட்க, மறுத்து வீரம் பேசல் (மகட்கொடை மறுப்பு)
(7) சித்து  உலோகத்தை மற்றோர் உலோகமாக்கல், பித்ளை  ஆடகம் பித்தலாட்டம்
(8) காலம் - தலைவன் பொருள்வயின் பிரியத் தலைவி கார்காலம் கண்டு வருந்தல்
(9) மதங்கி - இசைக்கும் கூத்துக்கும் உரியர் ‘மதங்கர்’  இப்பெண் 2 கைகளில் வாளேந்திச் சுழற்றி வருவதைப் பாராட்டல்
(10) வண்டு  வண்டுவிடு தூது  தலைவனிடத்துத் தலைவி
(11)  மேகம் - மேகவிடுதூது  (மேக சந்தேசம்)
(12)  கைக்கிளை  ஒருதலைக்காமம் (காட்சி, ஐயம், துணிவு, குறிப்பறிதல் தோன்றுமாறு பாடல்)
(13) சம்பிரதம் - சாலவித்தை வல்லார் தம் ஆற்றலைக் கூறுவது
(14)  தவம் - தவத்தை விலக்கி, இறைவனை எண்ணிச் செயல்படுமாறு பாடுவதாக அமைவது.
(15) பாண் - ஊடல் கொண்ட தலைவியிடம் பாணனைத் தூதுவிடல்
(16) தழை  தலைவி அணித் தலைவன் தழையுடை ஏந்திவரல்.
(17) இரங்கல்  பிரிவாற்றாத தலைவி இரங்கிப்பாடல்
(18) ஊர் - பாட்டுடைத்தலைவன் வாழும் ஊரின் பெருமை தோன்றப் பாடுவது; ஊர் (""அகவன் மகளே! இவர் மணிவரை குன்றம் பாடிய பாட்டே!"")
(19) குறம் - குறத்தி குறிபார்த்துக் கூறல், தலைவி மகிழ்தல்
(20) தூது  தலைவி, தலைவனிடம் அஃறிணைப் பொருட்களைத் தூது விடுத்தல்.
உரையாசிரியரால் காட்டப்பெறுவன:
(21) ஆற்றுப்படை  புரவலனை நோக்கி இரவலனை ஆற்றுப்படுத்துதல்
(22) இடைச்சியர் - தயிர் விற்கும் இடைச்சி எழிலைப் பாடல் (காதலன்)
(23) கீரையர் - கீரை விற்பவளின் எழிலைப் பாடல் (காதலன்)
(24) வலைச்சியர் - மீன் விற்பவளின் எழிலைப் பாடல் (காதலன்)
(25) கொற்றியர் - வைணவப் பெண்துறவி ஒருத்தியைப் பாடும் தலைவன்
(26) பிச்சியர் - சிவசின்னம் அணிந்த பெண்துறவியைக் காதலிக்கும் ஒரு பாடல்
(27) யோகினியார் - சூலப் பொறியிட்ட, கையில் கபாலம் ஏந்திய யோகினி என்னும் மங்கையின் பெருமையை உரைப்பது.
(28) சிலேடை  செம்மொழியாலோ, பிரிமொழியாலோ ஒன்றுக்கும் மேற்பட்ட பொருளமையப் பாடல்
(29) பள்ளு  பள்ளர்கள் வாழ்வியல் நிகழ்ச்சிகளைப் பாடல்
(30) பாதவகுப்பு  புயவகுப்பு, போலவே பாதவகுப்பு தலைவன் திருவடிச் சிறப்பு.
(31) வெறிவிலக்கல்  களவொழுக்கம் கொண்ட தலைவியை, வீட்டார் தெய்வக் குற்றம் எனக் கருதி வெறியாட்டயரச் செய்தல்.
இவற்றுள் காலம், வண்டு, மேகம், கைக்கிளை, பாண், தழை, இரங்கல், குறம், தூது, வெறிவிலக்கல் ஆகிய உறுப்புகள் அகப்பொருள் துறைகளை அடிப்படையாகக் கொண்டவை.
புயம், பாதவகுப்பு என்பன பாட்டுடைத் தலைவனின் அங்கச் சிறப்புகளைப் போற்றிப் பாடுபவை. மேலும், களி, மறம், ஆற்றுப்படை, பள்ளு என்பனவும் புறத்துறைகளை அடிப்படையாகக் கொண்டு எழுந்தவை. (ந.வீ. செயராமன், சிற்றிலக்கியச் செல்வம், ப.105)
மாறுபாடுகள்
கலம்பக எண்ணிக்கை மாறுபாடு, உறுப்புகள் பற்றிய பாட்டியில் விதிமுறைகள் பின்பற்றப்படாமை முதலியன இப்போது கலவையாகும் கலம்பகங்களில் காணப்பெறுகின்றன. நந்திக்கலம்பகம் 100க்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளன. சிவப்பிரகாச சுவாமிகளின் சிவஞான பாலய சுவாமிகள் கலம்பகத்தல் 95 பாடலுக்குப் பதிலாக 93 பாடல்களே உள்ளன. உறுப்புகள் 18 என்பதிலும் கருத்து வேறுபாடுள்ளது.
18 உறுப்புகளில் குறைந்து நந்திக் கலம்பகம், திருக்கலம்பகம், தில்லைக் கலம்பகம், திருவா மாத்துர்க் கலம்பகம் ஆகியன உள. அனந்த கிருஷ்ண ஐயங்கார் பாடிய திருப்பேரைக் கலம்பகத்தில் இருபத்தாறு உறுப்புகள் உள்ளன.
தொல்காப்பியத்திலேயே புயவகுப்பு, திருவடிவகுப்பு, வண்டு, அம்மானை, பாண், கைக்கிளை, ஊரல், ஊர், மறம், காலம், தழை, இரங்கல், களி, களர், தூது, குறம் முதலான பல உறுப்புகளுக்குரிய இலக்கண வித்துக்களைக் காணலாம் என்பார் ந.வீ. செயராமன். (சிற்றிலக்கியச் செல்வம் ப. 93)
கலம்பகம் என்றாலே தம் நினைவுக்கு வருவது நந்திக் கலம்பகமே. கி.பி. ஒன்பதாம் நுhற்றாண்டில் எழுந்த இந்த நுhலைப் பற்றி மு. அருணாசலம் அவர்க்ள வியந்து எழுதியுள்ளார். ழுல்லவ மன்னர் மூன்றாம் நந்திவர்மன்/தெள்ளாறெறிந்த நந்திவர்மன் (கி.பி.825-850) மீது இயற்றப் பெற்றது இந்த நுhல். இந்த நந்திவர்மனே கழற்சிங்க நாயனார் எனப் பெரிய புராணம் கூறும் என்பர் மா. இராச மாணிக்கனார் (பல்லவ வரலாறு பக்.198)
‘நந்தி கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்’ எனும் சோமேசர் முதுமொழி வெண்பா நந்திவர்மனின் தமிழார்வத்தைக் காட்டும். வில்லேர் உழவர் பகை கொள்ளலாகாது எனும் குறட்பாவுக்கு எடுத்துக்காட்டாக நந்திக் கலம்பக வரலாற்றை எடுத்துரைக்கலாம்.
தமிழில் ஏறத்தாழ எழுபது என்னும் எண் அளவை ஒட்டிக் கலம்பக இலக்கியங்கள் தோன்றியுள்ளன என்பர். ந.வீ. செயராமன் 85 கலம்பகங்களை முயன்று தேடிப் பட்டியலிட்டுள்ளார். பல்வேறு வகைச் செய்யுள்களும் அகப்பொருள், புறப்பொருள் கூறுபாடுகளும் நிறைந்து நகை, பெருமிதம், வெகுளி முதலான பல்சுவையும் கலந்து வரும் சுவை செறிந்த இலக்கியவகையே கலம்பகம் எனலாம்.
""வானுறு மதியை அடைந்ததுன் வதனம்;
வையக மடைந்ததுன் சீர்த்தி
கானுறு புலியை அடைந்ததுன் கரங்கள்
கற்பகம் அடைந்தவுன் கரங்கள்
தேனுறு மலராள் அரியிடம் சேர்த்தார்
செந்தழல் புகுந்ததுன் மேனி;
யானுமென் சலியும் எவ்விடம் புகுவேம்!
எந்தையே, நந்தி நாயகனே!""
எனும் பாடல் கையறு நிலையின் உச்சம் எனலாம். புலவர்களை இழந்த புறநானூற்றுப் புலவர் பெருமக்கள் பாடிய கையறுநிலைப் பாடலின் வழிவந்த கொடுமுடிப் பாடலாகக் கருத இடமுண்டு.
ஓடுகின்ற மேகங்காள்! ஓடாத தேரில்வெறுங்
கூடுவருகு தென்று கூறுங்கோள்!  நாடியே
நந்திச்சீ ராமனுடை நன்னகரில் நன்னுதலைச்
சந்திச்சீ ராமாகிற் றான்.
எனும் தூதுப்பாடல், அறம்பாடிய முறையை அறிந்தால் நெஞ்சம் நடுங்கும். (கூடு-பிணம், ஓடாத தேர் - பாடை என அமங்கலம் தொனிக்கப் பாடினார்கள்.)
வெண்பாவிற் புகழேந்தி, பரணிக்கோர் செயங்கொண்டார்,
விருத்த மென்னும்
ஒண்பாவில் உயர்கம்பன், கோவையுலா அந்தாதிக்கு
ஒட்டக் கூத்தன்,
கண்பாய கலம்பகத்திற்(கு) இரட்டையர்கள், வசைபாடக்
காள மேகம்,
பண்பாகப் பகர்சந்தம் படிக்காச லாதொருவர்
பகரொ ணாதே!
எனும் பாடல், ஒவ்வொரு வகையைப் பாடுவதில் வல்லவர் யாரெனும் பட்டியலைத் தரும் பாடல். திருவாமாத்தூர்க் கலம்பகம், தில்லைக் கலம்பகம் என்பவை இரட்டையர் பாடிய கலம்பகங்கள். இவர்கள் 15ஆம் நுhற்றாண்டினர்.
நிறைவாக. . . .
பா, பாவினம், அகம், புறம் எனப் பல்வகைக் கலப்புகளால் தோன்றிய கலம்பக இலக்கியத்தின் கூறுகள் பலவும் தொல்காப்பியத்துள் அரும்பிச் சங்க இலக்கியங்களில் மலர்ந்து, நந்திக்கலம்பகத்தில், பூத்துக் குலுங்கி, இரட்டையரால் மணங்கமழ்ந்து பொலிவுறும் இலக்கிய வகை எனலாம்.

No comments:

Post a Comment